வேலூரில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் குடியிருப்புப் பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
மாவட்டம் முழுவதிலும் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருவதால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு வாணியம்பாடி பாலாற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. தொடர் மழை காரணமாக, மாவட்டம் முழுவதிலும் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து வருகிறது.
மேலும், தாழ்வானப் பகுதிகளில் மழைநீர் தேங்கியிருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வேலூர் அருகே விருதம்பட்டு பாலு நகர் விஸ்தரிப்புப் பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
குடியிருப்புப் பகுதியில் மழைநீர் வழிந்தோட வடிகால் வசதி இல்லாததால் தேங்கிக் கிடக்கும் மழைநீரில் இருந்து கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாவதால் நோய் பாதிப்புக்கு ஆளாகும் சூழலுக்கு இப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
சாலை மற்றும் மின்சார வசதி இல்லாததால் இரவு நேரங்களில் பாம்பு மற்றும் விஷ ஜந்துகளின் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர அஞ்சுகின்றனர்.
எனவே, தேங்கியுள்ள மழைநீரை அப்புறப்படுத்தி, மின்சாரம், சாலை போன்ற வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வேலூரில் அதிகபட்ச மழை பதிவு: மாவட்டத்தில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி, அதிகபட்சமாக வேலூரில் 49.7. மி.மீட்டர் மழை பதிவானது. ஆம்பூர்-31, ஆற்காடு-3, திருப்பத்தூர்-25, வாணியம்பாடி-45.8, அரக்கோணம்-11, காவேரிபாக்கம்-25.8, வாலாஜாபேட்டை-7, சோளிங்கர்-14, குடியாத்தம்-27, ஆலங்காயம்-23, மேல் ஆலத்தூர்-25.4.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.