டிராக்டரை சிறைபிடித்து மணல் கொள்ளையைத் தடுத்த பொதுமக்கள்
ஆம்பூர் அருகே வியாழக்கிழமை நள்ளிரவு டிராக்டரை சிறைபிடித்து பொதுமக்கள் மணல் கொள்ளையைத் தடுத்தனர்.
ஆம்பூர் வட்டம், வடசேரி கிராமப் பகுதியில் கசக்கால்வாய் செல்கிறது. வெங்கடாபுரம் அருகே இக்கால்வாயின் கரையில் உள்ள மணல் இரவு நேரத்தில் லாரிகள், டிராக்டர்கள் மூலம் மணல் அள்ளப்படுகிறது. சுமார் 20 அடி ஆழம் அளவுக்கு குழிவெட்டப்பட்டு தினமும் மணல் கடத்தப்படுகிறது. இதனால் மண் சரிவு ஏற்பட்டு அருகில் உள்ள விவசாய நிலங்களும், சாலையும் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பல முறை புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் மணல் கொள்ளையை தடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. வடசேரி மற்றும் வெங்கடாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த சில நாள்களாகக் கண்காணித்து பணியில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு 11.30 மணிக்கு மணல் அள்ளிக்கொண்டு அவ்வழியாக வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். டிராக்டரை ஓட்டி வந்தவர்கள் அதை விட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.
இதுகுறித்து ஆம்பூர் வட்டாட்சியருக்கு தகவல் தெரிவித்தனர். வட்டாட்சியர் அறிவுறுத்தலின் பேரில் சின்னபள்ளிகுப்பம் மற்றும் செங்கிலிகுப்பம் கிராம நிர்வாக அலுவலர்கள் சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று பொதுமக்களால் சிறைபிடிக்கப்பட்ட மணல் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மணல் கொள்ளையைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.