காட்பாடி ரயில் நிலையம் அருகே ரயிலில் 13 சவரன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த வெங்கடேசனின் மனைவி பிந்து (35). இவர்கள் கேரள மாநிலம், பாலக்காட்டில் உள்ள தனது உறவினர்கள் வீட்டிற்கு செல்வதற்காக புதன்கிழமை ஹைதராபாத்திலிருந்து ஜோலார்பேட்டை வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் விரைவு ரயிலில் பயணம் செய்துள்ளார்.
ரயில் அதிகாலை 3 மணியளவில் காட்பாடி ரயில் நிலையத்துக்கு வந்தபோது, ஆழ்ந்த தூக்கத்திலிருந்த பிந்துவின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தாலிச் சரடு, கைப்பையில் வைத்திருந்த ரூ. 8 ஆயிரம் மற்றும் ஏடிஎம் அட்டை ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
மேலும், அதே ரயிலில் மற்றொரு பெட்டியில் பயணம் செய்த தெலங்கானா மாநிலம், சின்னமஜாரைச் சேர்ந்த நாகேஷ்ராவின் மனைவி மாதவியிடம் (40) மூன்றரை சவரன் தாலிச் சரடும், அசோக் ரெட்டியின் மனைவி லட்சுமியிடம் (32) நான்கரை சவரன் தங்க நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
இதுகுறித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.