பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தால் அதுகுறித்த விவரத்தை உடனே வட்டார மற்றும் நகராட்சி சுகாதார அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு, மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் அறிவுறுத்தினார்.
அரக்கோணம் நகராட்சி போலாட்சியம்மன் நடுநிலைப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு குறித்த அரக்கோணம் வட்டார அரசு மற்றும் அரசு நிதியுதவி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் மாவட்டக் கல்வி அலுவலர் குணசேகரன் பேசியதாவது: டெங்கு காய்ச்சல் வராதபடி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் தமிழக அரசு தற்போது எடுத்து வருகிறது. பள்ளி வளாகங்கள், வகுப்பறைகள் மற்றும் பள்ளிக் கட்டடம், மாடிப்பகுதிகள் மிகவும் தூய்மையாக வைக்கப்பட வேண்டும். தேவையில்லாத பொருள்களை வெளியில் வைக்க வேண்டாம். அவை மழையில் நனையும் போது அதில் கொசு உருவாகலாம். இதில், தலைமை ஆசிரியர்கள் அதிக கவனம் கொள்ள வேண்டும்.
3 நாள் பள்ளிக்கு வராத மாணவர்கள் குறித்தும், காய்ச்சல் அறிகுறி தென்படும் மாணவ, மாணவிகள் குறித்தும் தகவல்கள் வட்டார மற்றும் நகராட்சி சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்த வேண்டும். மாணவர்களின் குடும்பத்தினருக்கு காய்ச்சல் இருப்பது மாணவர்கள் வாயிலாக தெரியவந்தாலும் சுகாதார அலுவலருக்கு தெரியப்படுத்தலாம்.
முக்கியமாக மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அன்றாடம் தெரிவித்து அவர்களின் மனதில் பதியவைக்க வேண்டியதும் முக்கியம் என்றார் அவர்.
கூட்டத்துக்கு அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் எஸ்.ஆர்.பால்ராஜ் தலைமை வகித்தார். இதில், அரக்கோணம் வட்டாரக் கல்வி அலுவலர் இந்திரா, வட்டார மருத்துவ அலுவலர் ராஜயாமினி, அரக்கோணம் நகராட்சி சுகாதார அலுவலர் மோகன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் குமார், சுகாதார ஆய்வாளர்கள் செந்தில், சத்யராஜ் ஆகியோர் பங்கேற்றனர்.