நாட்டறம்பள்ளி அருகே தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே சரக்குப் பெட்டக லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. .
சென்னையில் இருந்து தனியார் நிறுவனத்தின் உதிரிபாகங்களை ஏற்றிக் கொண்டு, சரக்கு பெட்டக லாரி ஒன்று சனிக்கிழமை பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்தது. சென்னையைச் சேர்ந்த சுப்பையா (43) லாரியை ஓட்டினார். நாட்டறம்பள்ளியை அடுத்த வெலகல்நத்தம் பையனப்பள்ளி கூட்டுச் சாலை அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, இரும்புத் தடுப்பு மீது மோதி, எதிர்த் திசையில் உள்ள சாலையில் கவிழ்ந்தது. இதில், சுப்பையா லேசான காயமடைந்தார்.
சாலையின் குறுக்கே லாரி கவிழ்ந்ததால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று லாரியை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர்.