வாலாஜா ரோடு அருகே தண்டவாளத்தில் உயர் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால் வெள்ளிக்கிழமை சென்னை-கோவை மார்க்கத்தில் ரயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
வாலாஜா ரோட்டை அடுத்த தலங்கை ரயில் நிலையம் அருகே சென்னையில் இருந்து பெங்களூரு-கோவை மார்க்கமாகச் செல்லும் தண்டவாளத்தில் உயர் அழுத்த மின் கம்பி வெள்ளிக்கிழமை காலை திடீரென அறுந்து விழுந்தது. இதனால் அந்த மார்க்கத்தில் மின்தடை ஏற்பட்டு ரயில்கள் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
சென்னையில் இருந்து கோவை நோக்கி செல்லும் கோவை எக்ஸ்பிரஸ் ரயில் தலங்கை ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தப்பட்டது. சென்னையில் இருந்து பெங்களூரு செல்லும் டபுள்டக்கர் ரயில் சோளிங்கர் ரயில் நிலையத்திலும், அரக்கோணத்தில் இருந்து வேலூர் செல்லும் பாசஞ்சர் ரயில் அரக்கோணத்திலும் நிறுத்தப்பட்டன.
தகவலறிந்த அரக்கோணம், காட்பாடி ரயில் நிலையங்களில் இருந்து பணியாளர்கள் அங்கு சென்று சீரமைப்புப் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக இப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, அறுந்து விழுந்த உயர் அழுத்த மின் கம்பியை சரிசெய்தனர். அதன்பின் ரயில்கள் இயக்கப்பட்டன.
நடுவழியில் ரயில்கள் நிறுத்தபட்டதால் கோவை, பெங்களூரு செல்லும் பயணிகளும், அரக்கோணம், சென்னை, வேலூர், காட்பாடி, ஆம்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வேலைக்கு செல்பவர்களும் அவதிக்குள்ளாகினர்.