குடியாத்தம் அருகே மோர்தானா அணையில் மீன் பிடிக்கச் சென்றவர்களை யானை தாக்கியதில் 4 பேர் காயமடைந்தனர்.
மோர்தானா பகுதியைச் சேர்ந்த சிலர் அங்குள்ள அணை தண்ணீரில் திங்கள்கிழமை இரவு மீன் வலைகளை விரித்து வைத்து விட்டு வந்தார்கள். செவ்வாய்க்கிழமை அதிகாலை வலையில் சிக்கிய மீன்களை பிடித்து வர சென்றுள்ளனர். அப்போது புதர் மறைவில் இருந்த ஒற்றை யானை தும்பிக்கையால் அவர்களை தாக்கியுள்ளது. இதில் கோவிந்தசாமி (55), அவரது தம்பி குப்புசாமி (45), கஜேந்திரன் (50), தங்கவேலு (50) ஆகியோர் காயமடைந்தனர். அவர்கள் குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பலத்த காயமடைந்த கோவிந்தசாமி, தீவிர சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.