காட்பாடி அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். இதையடுத்து, சிறுவனின் சடலத்துடன் பெற்றோர், உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
காட்பாடி அருகே ஆழ்வார்தாங்கள் பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன்-பவித்ரா தம்பதியின் மகன் கரண்குமார் (11). இவர், அப்பகுதியிலுள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்புப் படித்து
வந்தார்.
கரண்குமாருக்கு சிறுநீரகத்தில் கல் இருப்பதாக திருவலம் பகுதியில் உள்ள தனியார் சிகிச்சை மையத்தில் கடந்த ஒரு வாரமாக சிகிச்சை பெற்று வந்தாராம். இதையடுத்து வெள்ளிக்கிழமை அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர் அச்சுதானந்தன் தெரிவித்துள்ளார்.
இதன்படி, வெள்ளிக்கிழமை அச்சிறுவனுக்கு மேல்விஷாரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சிறுவன் உயிரிழந்தான்.
இதையடுத்து, மருத்துவரின் தவறான சிகிச்சையால்தான் சிறுவன் கரண்குமார் உயிரிழந்ததாகக் கூறி அந்தச் சிறுவனின் சடலத்துடன் பெற்றோர், உறவினர்கள் காட்பாடி-திருவலம் சாலை கார்ணாம்பட்டு பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவலறிந்த காட்பாடி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை
நடத்தினர்.
தொடர்ந்து தப்பியோடிய மருத்துவர் அச்சுதானந்தனையும் தேடி வருகின்றனர். அச்சுதானந்தன் அரசு மருத்துவராக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருவது
குறிப்பிடத்தக்கது.