வேலூர் மத்திய சிறைக்குள் செல்லிடப்பேசி எடுத்துச் சென்றதாக பெண் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் மத்திய சிறைக்கு உள்பட்ட பெண்கள் தனிச் சிறையில் ராஜீவ் காந்தி கொலைக் கைதி நளினி உள்பட 400-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பெண்கள் தனிச்சிறையில் பணியாற்றும் 2-ஆம் நிலை காவலர் திலகவதி (54), சனிக்கிழமை சிறைக்குள் தனது செல்லிடப்பேசியை எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, நுழைவு வாயிலில் போலீஸார் அவரைச் சோதனையிட்டபோது அவர் செல்லிடப்பேசியை மறைத்து எடுத்துச் சென்றது தெரியவந்தது.
இதுதொடர்பாக பாகாயம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதனிடையே, பெண் காவலரிடம் செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து உயரதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அதன்பேரில் பெண் காவலர் திலகவதி உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சிறைத் துறை டி.ஐ.ஜி. ஜெயபாரதி பிறப்பித்தார்.