வேலூரில் நடைபெற்ற விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலகத்தின்போது இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், மோதல் சூழல் உருவாவதைத் தடுக்க போலீஸார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் விசர்ஜன ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது. வேலூர், கொணவட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 85 சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சதுப்பேரி ஏரியில் விசர்ஜனம் செய்யப்பட்டன. இதில், கொணவட்டம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த 18 சிலைகள் மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன. அப்போது, கொணவட்டம் சந்திப்பு பகுதியில் உள்ள மசூதி அருகே சென்றபோது இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக அங்கு மோதல் ஏற்படும் சூழல் உருவானது.
இதையடுத்து, அப்பகுதியில் இருந்த நூற்றுக்கணக்கான போலீஸார் உடனடியாக தடுப்புகள் அமைத்து இரு தரப்பினரையும் தடுத்தனர். அதேசமயம், விநாயகர் சிலை ஊர்வலமும் மசூதியை கடந்து சென்றதால் வாக்குவாதம் முடிவுக்கு வந்தது. இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் ஏற்பட்டது. எனினும், பாதுகாப்பு கருதி அப்பகுதியில் தொடர்ந்து இரவு வரை போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.