மின்விநியோகத்தை சீரமைக்கும் வகையில் புதிய மின்மாற்றி அமைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததையடுத்து நாவிதம்பட்டி கிராம மக்கள் தேர்தலில் வாக்களிக்க முடிவெடுத்துள்ளனர்.
நாவிதம்பட்டி கிராமத்தில் கடந்த 2 ஆண்டுகளாக குறைந்த அழுத்த மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இதனால் வீடு உபயோக பொருள்கள், விவசாய மோட்டார்கள் அடிக்கடி பழுது ஏற்படுவதாகவும் கிராம மக்கள் புகார் கூறி வந்தனர்.
மின்மாற்றி அமைக்குமாறு மின்வாரிய அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை மனுக்கள் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், நடைபெற உள்ள சட்டப்பேரவை இடைத் தேர்தலையும் மக்களவைத் தேர்தலையும் புறக்கணிப்பதென கிராம மக்கள் தீர்மானித்தனர்.
இதுகுறித்து "தினமணி'யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை செய்தி வெளியானது. இதையடுத்து குடியாத்தம் தொகுதி உதவி தேர்தல் அலுவலர் செண்பகவள்ளி தலைமையில் திங்கள்கிழமை பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் பரவக்கல், மேல்பட்டி மின்வாரிய அதிகாரிகளும் பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் கிராம மக்களின் கோரிக்கை ஏற்கப்படுவதாகவும், முன்னுரிமை அடிப்படையில் விரைவில் அந்த கிராமத்துக்கு கூடுதல் திறன் கொண்ட புதிய மின்மாற்றி அமைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து தேர்தலில் வாக்களிக்க கிராம மக்கள் முடிவெடுத்துள்ளனர்.