கோடை வெயில் அதிகரித்து வருவதால் வனவிலங்குகள் பருகுவதற்காக வேலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட வனப்பகுதியில் 12 இடங்களில் தொட்டிகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியில் உள்ள வனவிலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் வருகின்றன.
அவ்வாறு வரும் புள்ளிமான்கள், இதர விலங்குகள் விபத்தில் சிக்குவது, நாய்களால் காயப்படுத்தப்படுவதும் தொடர்கிறது. இதையடுத்து வன விலங்குகள் தண்ணீர் பருக வனப் பகுதியிலேயே தொட்டிகள் அமைத்து தண்ணீர் ஊற்றப்படுகிறது.
வேலூர் வனச்சரகத்துக்கு உள்பட்ட லத்தேரி, குஞ்சனூர் வனப்பகுதிகளில் 6 இடங்களில் சிறிய அளவிலான தொட்டிகள், 6 இடங்களில் பெரிய அளவிலான தொட்டிகள் என 12 தொட்டிகள் அமைக்கப்பட்டு அவற்றில் டிராக்டர் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டுள்ளன. கோடை காலம் முடியும் வரை இந்தத் தொட்டிகளில் நாள்தோறும் தண்ணீர் நிரப்பப்படும் என்று வனத் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.