வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
சிலுவைப் பாடுகளுக்கு முன்பு இயேசு கிறிஸ்து ஜெருசலேம் நகருக்குள் வரும் நிகழ்ச்சியை நினைவுகூரும் குருத்தோலை ஞாயிறு வழிபாடு உதயேந்திரம் இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத் தந்தை ஏ.ராயப்பன் தலைமையில் கிறிஸ்தவர்கள் குருத்தோலைகளை கையில் ஏந்தியவாறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று தூயநெஞ்ச ஆண்டவர் ஆலயத்தை அடைத்தனர். ஆலயத்தில் குருத்தோலை ஞாயிறு சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
இதில் உதயேந்திரம் பங்கு மேய்ப்புக் குழுவினர் கலந்து கொண்டனர். இதேபோல் கோணாமேடு சகாயா மாதா ஆலயம், காமராஜபுரம் அந்தோணியார் ஆலயங்களிலும் குருத்தோலை ஞாயிறு வழிபாடு நடைபெற்றது.
துருகம் கிராமத்தில்....
திமிரியை அடுத்த துருகம் கிராமத்தில் உள்ள தென்னந்திய கிறிஸ்தவ திருச்சபையில் குருத்தோலை ஞாயிறு வழிபாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு சபைப் பொறுப்பாளர் ஜா.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நிர்வாகிகள் ரஞ்சன்குமார், மகேஷ், கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.