மக்களவைத் தேர்தலையொட்டி, வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களிலுள்ள அனைத்து தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வியாழக்கிழமை (ஏப்.18) பொதுவிடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலக பாதுகாப்பு, சுகாதார இயக்கம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அதன் இணை இயக்குநர் மு.அ.முகம்மது கனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல், 18 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஆகியவை வியாழக்கிழமை நடைபெற உள்ளன. இத்தேர்தலில் அனைத்துப் பிரிவு தனியார் தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் வாக்களிப்பதற்காக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951 பிரிவு 135பி-இன் படி தேர்தல் நாளான வியாழக்கிழமை வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகள், கட்டட, இதர கட்டுமானப் பணிகளில் பணியாற்றும் பிற மாநிலத் தொழிலாளர்கள் உள்பட அனைத்துத் தொழிலாளர்களுக்கும் சம்பளத்துடன் கூடிய விடுமுறையை கட்டாயமாக அளிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பான புகார்களை 0416 - 2254953, 0416 -224575 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.