இந்தியன் வங்கியின் திருத்தணி கிளையில் வியாழக்கிழமை இரவு திடீரென எச்சரிக்கை மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருத்தணி ம.பொ.சி. சாலையில் இந்தியன் வங்கிக் கிளை இயங்கி வருகிறது .இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் கணக்கு வைத்துள்ளனர். மேலும், இந்த வங்கியில் இருந்து அரசு, தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது.
இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு வங்கி ஊழியர்கள் பணி முடிந்ததும் வங்கியை பூட்டிவிட்டுச் சென்றனர். இரவு 7 மணி அளவில் வங்கியின் எச்சரிக்கை மணி திடீரென ஒலித்தது.
தகவலறிந்த திருத்தணி போலீஸார் அங்கு விரைந்து வந்தனர். மேலும், வங்கி மேலாளர், ஊழியர்கள் வந்து வங்கியை திறந்து பார்த்தபோது அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறவில்லை என தெரியவந்தது.
விசாரணையில் வங்கி அருகே இருந்த ஏடிஎம் இயந்திரத்தில் 2 வயது குழந்தை இருசக்கர வாகனத்தின் சாவியை போட்டு திறக்க முயன்றதால் எச்சரிக்கை மணி ஒலித்தது தெரியவந்தது.
இதையடுத்து வங்கி ஊழியர்கள் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து சாவியை எடுத்ததும் எச்சரிக்கை மணி சப்தம் நின்றது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.