ஆம்பூரில் திருமண நிகழ்ச்சிக்காக திறந்து விடப்பட்ட மண்டபம் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் பூட்டி "சீல்' வைக்கப்பட்டது.
ஆம்பூர் நாகநாத சுவாமி கோயில் தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கடந்த இரு நாள்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று அங்கிருந்த பள்ளிவாசல் முத்தவல்லிகளிடையே பேசினார். அனுமதியின்றி கூட்டம் நடத்தப்பட்டதால் வேலூர் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் அந்தத் திருமண மண்டபம் பூட்டி "சீல்' வைக்கப்பட்டது.
இந்த திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடக்க இருந்தது. இதனால் திருமணம் தடைபடாமல் நடக்க அனுமதி அளிக்க வேண்டும் என மண்டப நிர்வாகத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
அதன் அடிப்படையில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திருமண மண்டபத்துக்கு வைக்கப்பட்ட சீலை தற்காலிகமாக அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார். அதன்பேரில் வருவாய்த் துறையினர் சீலை அகற்றினர். திருமண நிகழ்ச்சி நடந்து முடிந்ததை அடுத்து ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணிக்கு வருவாய்த் துறையினரால் திருமண மண்டபம் மீண்டும் பூட்டி "சீல்' வைக்கப்பட்டது.