பள்ளிகொண்டா அருகே ரிசர்வ் வங்கிக்கு பணம் ஏற்றிச் சென்ற லாரி மீது தனியார் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மோதியது.
கர்நாடக மாநிலம் மைசூர் ரிசர்வ் வங்கியில் இருந்து பணம் ஏற்றிக் கொண்டு 2 கன்டெய்னர் லாரிகள் சென்னை ரிசர்வ் வங்கிக்குச் சென்றன. லாரிக்கு பாதுகாப்பாக மத்திய தொழில் பாதுகாப்புப் படை போலீஸார் சென்றனர்.
பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அருகே சென்றபோது கன்டெய்னர் லாரிகளை தனியார் பேருந்து முந்திச் செல்ல முயன்றபோது பேருந்து மோதியது. இதில் கன்டெய்னர் லாரிக்கு லேசான சேதம் ஏற்பட்டது. பேருந்து ஓட்டுநருக்கும், லாரி ஓட்டுநருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் பணம் ஏற்றிச் சென்ற இரு கன்டெய்னர் லாரிகளும் தேசிய நெடுஞ்சாலையில் நின்றன.
அப்போது அவ்வழியாக தேர்தல் பணிக்காகச் சென்ற மாவட்ட ஆட்சியர் அ.சண்முக சுந்தரம் அங்கு சென்று விசாரணை நடத்தினார். பேருந்து ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு பள்ளிகொண்டா போலீஸாருக்கு உத்தரவிட்டார்.
மேலும், பணத்துடன் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கன்டெய்னர் லாரிகளை பாதுகாப்புடன் அனுப்பி வைத்தார்.