ஒரு டன் ரேஷன் அரிசி பறிமுதல்
By DIN | Published On : 09th August 2019 07:53 AM | Last Updated : 09th August 2019 07:53 AM | அ+அ அ- |

நாட்டறம்பள்ளி அருகே காரில் கடத்திச் சென்ற ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்த் துறையினர் பறிமுதல் செய்தனர்.
மாவட்ட வழங்கல் அலுவலர் பார்த்தீபன் மேற்பார்வையில் நாட்டறம்பள்ளி வட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் (பொறுப்பு) தலைமையில் வருவாய்த் துறையினர் புதன்கிழமை இரவு 9 மணியளவில் கொத்தூர் காந்தி நகர் பகுதியில் ரேஷன் அரிசி கடத்தல் தடுப்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அவ்வழியாக வந்த காரை நிறுத்த முயன்றபோது, அதிகாரிகளைக் கண்டதும் ஓட்டுநர் காரை விட்டுவிட்டு தப்பிச் சென்றார். இதையடுத்து அதிகாரிகள் காரில் சோதனை செய்தபோது 18 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசியை ஆந்திர மாநிலத்துக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து அரிசி மூட்டைகளையும், காரையும் பறிமுதல் செய்து, நாட்டறம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் ரயிலில் கடத்தப்பட்ட 800 கிலோ ரேஷன் அரிசியை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ஆம்பூர் ரயில் நிலையத்துக்கு வந்த பெங்களூரு விரைவு ரயிலில் ரயில்வே பாதுகாப்புப் படை உதவி ஆய்வாளர் பெருமாள், துணை உதவி ஆய்வாளர் சௌந்தர்ராஜன் ஆகியோர் சோதனை நடத்தினர். ரயிலில் இருந்த 25 மூட்டைகளில் 800 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து, வேலூர் பறக்கும் படை வட்டாட்சியர் பாலாஜியிடம் ஒப்படைத்தனர்.