வாணியம்பாடி வட்டார ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் குடியாத்தம் பிச்சனூரில் உலக தாய்ப் பால் வார விழா சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.
இதில் குடியாத்தம், ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்தூர் பகுதிகளைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் கலந்து கொண்டனர். மாவட்ட குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆர்.செந்தில்குமார் தலைமை வகித்தார். குடியாத்தம் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர் எம். தேன்மொழி வரவேற்றார். தாய்ப் பாலின் அவசியம் குறித்தும், கர்ப்பிணிகளின் உணவு முறைகள் குறித்தும், அரசு மருத்துவர் ஜே.பிரேமலதா, இன்னர்வீல் சங்க முன்னாள் தலைவர் விஜயலட்சுமி ராமமூர்த்தி, தலைமையாசிரியை வெ.கீதா, ஆசிரியை பிரேமா, கவிஞர் ஜி.முல்லைவாசன் ஆகியோர் பேசினர்.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது. கொழு கொழு குழந்தைகளுக்கும், கலை நிகழ்ச்சியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கும் மாவட்டத் திட்ட அலுவலர் ஆர். செந்தில்குமார் பரிசுகள் வழங்கினார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலர்கள் லட்சுமி, இ.ராஜராஜேஸ்வரி, வனிதாமணி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.