வேலூர் மாவட்டத்தின் ராணுவப்பேட்டை என்று அழைக்கப்படும் கம்மவான்பேட்டை கிராமத்தில் 100 அடி உயர கொடிக் கம்பத்தில் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வியாழக்கிழமை தேசியக் கொடியேற்றி சிறப்புரை ஆற்றுகிறார்.
நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, இக்கிராமத்தில் முன்னாள், இந்நாள் முப்படை வீரர்கள், சென்னை விருகம்பாக்கம் ஆகஸ்ட் 15 என்ற அமைப்பு மற்றும் கம்மவான்பேட்டை ரெட்ரோஸ் வாரியர் ஆகியவை இணைந்து 100 அடி உயர கம்பத்தில் தேசியக் கொடி ஏற்றுதல், முன்னாள், இந்நாள் முப்படை வீரர்களைக் கௌரவித்தல், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல் ஆகிய முப்பெரும் விழா அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை பகல் 1 மணியளவில் நடைபெற உள்ளது.
இந்த விழாவில் மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றுகிறார். தொடர்ந்து, தமிழக முன்னாள் தலைமைச் செயலர் கே.எஸ்.ஸ்ரீபதி, கேரள மாநில முன்னாள் டிஜிபி கே.எஸ்.பாலசுப்பிரமணியன், வேலூர் மாவட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் அலுவலக துணை இயக்குநர் கே.செந்தில் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பரிசுகள் மற்றும் நல உதவிகளை வழங்க உள்ளனர்.