பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரி எம்எல்ஏ மறியல்

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரி திமுக எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் அக்கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைவில் முடிக்கக் கோரி திமுக எம்எல்ஏ நல்லதம்பி மற்றும் அக்கட்சியினர் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூரில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பாதாள சாக்கடை திட்டப் பணிகள் ரூ. 108 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டன. இப்பணிகள் முழுமை அடையாமல் மந்தகதியில் நடைபெற்று வருவதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர். 
இப்பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இதுவரை ராணுவ வீரர் உள்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 25-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்துள்ளனர். 
இப்பணிகளை விரைந்து முடிக்கக் கோரி நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் எம்எல்ஏ நல்லதம்பி பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில் புதன்கிழமை, எம்எல்ஏ நல்லதம்பி, அக்கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் திருப்பத்தூர்-திருவண்ணாமலை பிரதான சாலையில் மறியலில் ஈடுபட்டார். தகவலறிந்த நெடுஞ்சாலைத் துறை உதவிக் கோட்டப் பொறியாளர் திரிலோகசுந்தர், வட்டாட்சியர் இரா.அனந்தகிருஷ்ணன், பாதாள சாக்கடை திட்ட அதிகாரிகள் மற்றும் திருப்பத்தூர் நகர போலீஸார் அங்கு சென்று மறிலலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது எம்எல்ஏ நல்லதம்பி, பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக தோண்டப்பட்ட சாலை 20 கி.மீ. தூரத்துக்கு சீரமைக்கப்படவில்லை. 
உடனடியாக சாலை அமைக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் மக்களைத் திரட்டி சார்-ஆட்சியர் அலுவலம் முன்பு உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.
இரு நாள்களில் சாலை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் அப்பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com