ஏலகிரி மலை புங்கனூர், நிலாவூர் கிராமங்களில் மழை வேண்டி அம்மனுக்கு புதன்கிழமை தீச்சட்டி, பால்குடம் எடுத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
ஏலகிரிமலையில் இயற்கை பூங்காவில் உள்ள புங்கநாச்சி அம்மனுக்கு புங்கனூர் கிராமம் விநாயகர் கோயிலில் இருந்து கரகம், கஞ்சி கலயம், பால் குடம், தீச்சட்டி ஏந்தியவாறு பம்பை, சிலம்பாட்டத்துடன் பத்ரகாளியம்மன், நாகாத்தம்மன் வேடமிட்டு பக்தர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
தொடர்ந்து, மழை வேண்டி அம்மனுக்கு அபிஷேக, அலங்கார பூஜையும், ஆடிப்பூர கஞ்சி வார்த்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இதேபோன்று நிலாவூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் சிறப்புப் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து தீ மிதி விழா நடைபெற்றது. விழா முடிவில் ஏலகிரி மலையில் மழை பெய்ததால் பக்தர்களும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்தனர்.