ஆம்பூரில் கிருஷ்ண ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆம்பூர் காசி செட்டித்தெருவில் அமைந்துள்ள வேணுகோபாலசுவாமி திருக்கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி கணபதி ஹோமம், சுதர்ஸன ஹோமம், சிறப்பு அபிஷேக, அலங்காரம், திருவிளக்கு பூஜை, சகஸ்ரநாம அர்ச்சனை, திவ்ய நாம சங்கீர்த்தனம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
ஆம்பூர் அருகே வீரவர் கோயில் பகுதியில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயிலில் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
பள்ளிகளில்...
ஆம்பூர் விவேகானந்தா மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழாவையொட்டி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாறுவேடப்போட்டிகளும் நடைபெற்றது. இதில் மாணவ, மாணவியர் கிருஷ்ணர், ராதை வேடம் அணிந்து விழாவில் பங்கேற்றனர். உரியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
ஆம்பூர் தக்ஷிலா குளோபல் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பள்ளி முதல்வர் லட்சுமி தலைமை வகித்தார். ஆர்பிஎல் வங்கியின் ஆம்பூர் கிளை மேலாளர் மஹாவீர் ஜெயின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.
மாணவர்கள் கிருஷ்ணர், ராதை வேடமணிந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். தொடர்ந்து, மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை நிர்வாக அலுவலர் பத்மநாபன் செய்திருந்தார்.
ராணிப்பேட்டையில்...
ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில், கிருஷ்ண ஜயந்தி விழாவில் கிருஷ்ணர் மாறுவேடம் அணிந்து போட்டியில் பங்கேற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
கிருஷ்ண ஜயந்தி மற்றும் ஆசிரியர் தின விழா ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு ஸ்ரீ ராமாநுஜர் ஆன்மிக அறக்கட்டளை நிறுவனத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். பொருளாளர் மோகன சக்திவேல் முன்னிலை வகித்தார். தலைமை ஆசிரியை ஜெயஸ்ரீ கோதை வரவேற்றார். விழாவில் யாதவ மகா சபை தலைவர் சேதுமாதவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு "தேசமும், தெய்வீகமும்', "கிருஷ்ண அவதாரம்' ஆகிய தலைப்புகளில் பேச்சு மற்றும் மாறு வேடப் போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள், எழுதுபொருட்களை வழங்கினர்.
விழாவில் அறக்கட்டளை நிர்வாகிகள் சிவலிங்கம், எம்.பாலு, இளஞ்செழியன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.