ஏலகிரி மலையில் நடைபெற்ற வட்டார அளவிலான கைப்பந்து போட்டியில் அரசுப் பள்ளி மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடத்தைப் பிடித்தனர்.
ஏலகிரி மலை, மேட்டுகனியூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஜோலார்பேட்டை வட்டார அளவில் பள்ளிகளுக்கு இடையேயான கைப்பந்துப் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
14 வயதுக்கு உள்பட்ட ஜூனியர் பிரிவு, 17 வயதுக்கு உள்பட்ட சீனியர் பிரிவு மற்றும் 19 வயதுக்கு உள்பட்ட சூப்பர் சீனியர் பிரிவுகளில் மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில், ஜோலார்பேட்டை சுற்றுப் பகுதியில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். ஜூனியர் பிரிவில் புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடமும், திரியாலம் அரசுப் பள்ளி மாணவர்கள் 2-ஆம் இடமும், சூப்பர் சீனியர் பிரிவில் பொன்னேரி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடமும், புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் 2-ஆம் இடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான கைப்பந்துப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்டனர்.
புதுப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் சேகர் உள்ளிட்ட ஆசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டனர்.