காட்பாடியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணிக்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
காட்பாடி அருகே கல்புதூர் ராஜலிங்கநகர் பகுதியில் தனியார் நிறுவனம் சார்பில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கத் திட்டமிட்டிருந்தது.
இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஏற்கனவே ஒருமுறை செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கும் பணியை அந்நிறுவனம் நிறுத்தி வைத்திருந்தது. இந்நிலையில், உயர்நீதிமன்றத்தில் அனுமதி பெற்று அந்த இடத்தில் கோபுரம் அமைக்க செல்லிடப்பேசி நிறுவன அதிகாரிகள் அப்பகுதிக்கு வெள்ளிக்கிழமை வந்தனர்.
தகவலறிந்த அப்பகுதி மக்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இப்பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. செல்லிடப்பேசி கோபுரம் அமைத்தால் இந்த பகுதி மக்களின் உடல்நலம் பாதிக்கப்படும். எனவே, இப்பகுதியில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கக்கூடாது என்றும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து, செல்லிடப்பேசி நிறுவன அதிகாரிகள், கோபுரம் அமைக்கும் பணியை மேற்கொள்ளாமல் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.