ஜோலார்பேட்டை அருகே மனைவி தற்கொலை வழக்கில் கணவர், மாமியாரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
சின்ன மூக்கனூரைச் சேர்ந்த மகேந்திரன் மகன் சக்தி(எ) சக்தி வாணன் (19). திருச்செங்கோட்டில் உள்ள தனியார் மில்லில் பணிபுரிந்து வந்தார்.
அதே மில்லில் பணிபுரிந்து வந்த கடலூர் மாவட்டம், ஊத்துக்குளி முருகானந்தம் மகள் திவ்யாவை காதலித்து 2 ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இருவரின் காதலுக்கு பெற்றோர் தரப்பில் எதிர்ப்பு இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த மாதம் 17-ஆம் தேதி திவ்யா வீட்டில் இருந்த போது விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இதுகுறித்து, திவ்யாவின் தந்தை முருகானந்தம் அளித்த புகாரின் பேரில்,ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப்பதிவு செய்து,விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில்,ஜோலார்பேட்டை போலீஸார் வெள்ளிக்கிழமை மாலை ஆசிரியர் நகர் அருகே சக்திவாணன் மற்றும் அவரது தாயார் மஞ்சுளா ஆகிய இருவரையும்,வரதட்ணை கொடுமை மற்றும் தற்கொலைக்கு தூண்டியதாக இருபிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு மேற்கொண்டு கைது செய்தனர்.