செம்மரக் கடத்தல்: தமிழகத் தொழிலாளி கைது
By DIN | Published On : 28th August 2019 09:47 AM | Last Updated : 28th August 2019 09:47 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
திருப்பதி சேஷாசல வனப் பகுதியில், செம்மரக் கடத்தலில் ஈடுபட்டதாக தமிழகத் தொழிலாளியை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
திருப்பதி அருகில் உள்ள ராகிமானுகுண்டா சேஷாசல வனப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை செம்மரக் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சிலர் அவ்வழியாக செம்மரக் கட்டைகள் சுமந்து செல்வதைக் கண்டனர். போலீஸாரைப் பார்த்த கடத்தல்காரர்கள் கட்டைகளைப் போட்டு விட்டு தப்பியோடினர். இதையடுத்து, அவர்களை விரட்டிச் சென்ற போலீஸார் ஒருவரை மட்டும் கைது செய்து, 9 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், கைது செய்யப்பட்டவர் திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூரைச் சேர்ந்த சுவாமிநாதன் என்பது தெரிய வந்தது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...