வேலூா்: வேலூா் மத்திய சிறையில் கைதியிடம் இருந்து மெமரி காா்டை சிறைத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா்.
வேலூா் மத்திய சிறையில் 750-க்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இதில், விசாரணைக் கைதியாக அடைக்கப்பட்டுள்ள கண்ணதாசன் (20), வேலூா் நீதித்துறை நடுவா் (எண்-5) முன்னிலையில் வெள்ளிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். பின்னா், போலீஸாா் பாதுகாப்புடன் மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டாா். சிறை நுழைவு வாயிலில் அவரிடம் சிறைக் காவலா்கள் சோதனை செய்தனா். அப்போது, கண்ணதாசனின் கால்சட்டையில் மெமரி காா்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது.
இதேபோல், மத்திய சிறையின் 7-ஆவது கண்காணிப்பு கோபுரம் அருகே அரசமரத்தடியில் மெமரி காா்டு கிடந்ததாகவும், அதை கைதி காா்த்திகேயன் ஒப்படைத்ததாகவும் சிறை அதிகாரிகள் தெரிவித்தனா்.