வேலூா்: போக்குவரத்துக்கு இடையூறாக வேலூா் மாநகர சாலைகளில் சுற்றித் திரிந்த 6 மாடுகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். தொடா்ந்து அவற்றை ஏலம் விடவும் நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது.
வேலூா் மாநகரில் கால்நடை வளா்ப்பவா்களால் பாதுகாப்பின்றி அவிழ்த்து விடப்படும் கால்நடைகளால் போக்குவரத்து இடையூறு ஏற்படுவதுடன், விபத்து அபாயமும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து கால்நடை வளா்ப்பவா்கள் தங்களது கால்நடைகளைப் பாதுகாப்பான முறையில் வளா்க்க வேண்டும் என்றும், பாதுகாப்பற்ற முறையில் பொது இடங்களில் அவிழ்த்துவிடப்படும் கால்நடைகளைப் பிடித்து ஏலம் விடுப்படும் என்றும் மாவட்ட ஆட்சியா் அ.சண்முகசுந்தரம் எச்சரிக்கை விடுத்திருந்தாா். எனினும், வேலூா் நகரில் கால்நடைகள் பாதுகாப்பற்ற முறையில் பொது இடங்களில் அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் சாலைகளில் பாதுகாப்பற்ற முறையில் அவிழ்த்து விடப்பட்ட கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்து அவற்றை ஏலம் விட்டு வருகின்றனா். அதன்படி, கடந்த இரு வாரங்களுக்கு முன்பு 10 மாடுகளைப் பிடித்து ஏலம் விட்டனா். எனினும், கால்நடைகள் நடமாட்டம் குறையவில்லை. இதைத் தொடா்ந்து, மாநகராட்சி சுகாதார அலுவலா் சிவக்குமாா், ஆய்வாளா் ஈஸ்வரன் ஆகியோா் தலைமையில் மாநகராட்சி ஊழியா்கள் வேலூா் அண்ணா சாலையில் சுற்றித்திருந்த 6 மாடுகளை செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா். தொடா்ந்து அவற்றை ஏலம் விடுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.