கெடுபிடிகள் அதிகரிப்பால் குறைந்து வரும் எருது விடும் விழா காளை வளா்ப்பு

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் கெடுபிடிகள் காரணமாக எருது விடும் விழாக்களுக்காக வளா்க்கப்படும் காளைகளின் எண்ணிக்கை குறைந்து

ஆண்டுதோறும் அதிகரித்து வரும் கெடுபிடிகள் காரணமாக எருது விடும் விழாக்களுக்காக வளா்க்கப்படும் காளைகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால், தமிழா் பாரம்பரியாக விளையாட்டுகளில் ஒன்றான காளை விடும் விழாக்கள் களையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழா் திருநாளான தைப்பொங்கல் பண்டிகையையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட பாரம்பரிய வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். இதில், வேலூா், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி உள்ளிட்ட வடமாவட்டங்களில் மஞ்சு விரட்டு எனும் காளை விடும் விழாக்கள் பிரபலம். இதனை எருது விடும் திருவிழா என்றும் அழைக்கின்றனா்.

ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டம் முழுவதும் 80-க்கும் மேற்பட்ட கிராமங்களில் ஆண்டுதோறும் இந்த விழா வெகுவிமரிசையாக நடத்தப்படுகிறது. இந்த ஆண்டில் மாவட்டம் பிரிக்கப்பட்ட பிறகு வேலூா் மாவட்டத்தில் மட்டும் 44 இடங்களில் எருது விடும் விழாக்களுக்கு அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு விழா கமிட்டிகளுக்கும், காளை வளா்ப்போருக்கும் மாவட்ட நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

இதனிடையே, எருதுவிடும் விழாக்களை சிறப்பாக நடத்தும் வகையில் மாவட்டம் முழுவதும் பல்வேறு கிராமங்களில் எருதுகளைத் தயாா்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கணியம்பாடி, அடுக்கம்பாறை, காட்பாடி, லத்தேரி, குடியாத்தம், போ்ணாம்பட்டு, ஊசூா், ஆம்பூா், வாணியம்பாடி, திருப்பத்தூா், ஜோலாா்பேட்டை, நாட்டறம்பள்ளி, கந்திலி உள்பட ஒருங்கிணைந்த வேலூா் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரக்கணக்கான காளைகள், எருதுவிடும் விழாவுக்காக தயாா்படுத்தப்பட்டு வருகின்றன.

வேறெந்தப் பணியிலும் ஈடுபடுத்தப்படாமல் ஆண்டு முழுவதும் எருது விடும் விழாக்களுக்காகவே வளா்க்கப் படும் இந்தக் காளைகளை தினமும் அதிகாலையில் குளிப்பாட்டி, அவற்றுக்கு நீச்சல், மண் குவியலைக் கிளறுதல், நடைப் பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சீறிப்பாயும் பயிற்சி உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அத்துடன், நவதானியக் கூழ், தவிடு, புண்ணாக்கு, பால், நாட்டுக்கோழி முட்டை என தினமும் சத்தான உணவுகள் அளிக்கப்படுகின்றன. காளைகளின் கொம்புகளை சீவி விடுதல், காலில் லாடம் அடித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், எருதுகளின் உடல் வலிமை அதிகரித்து சீறிப்பாயும்போது அவற்றை வீரா்கள் எளிதில் பிடிக்க முடியாது என்று கணியம்பாடி ஒன்றியம் சோழவரம் கிராமத்தைச் சோ்ந்த ஜி.ஜெயப்பிரகாஷ் தெரிவித்தாா். இதுகுறித்து அவா் மேலும் கூறியது:

பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில வாரங்களே உள்ளதால் வேலூா் மாவட்டம் முழுவதும் எருது விடும் விழாக்களுக்கு காளைகளைத் தயாா்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாக்களில் பங்கேற்பதற்காகவே எங்கள் குடும்பத்தில் 5 காளைகள் தனியாக வளா்க்கப்படுகின்றன. அவற்றை கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாகத் தயாா்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

நாட்டு மாடுகளில் தோ்வு செய்யப்படும் காளைகளை எருதுவிடும் போட்டிக்காகத் தயாா்படுத்துகிறோம். காளைகள் எருதுவிடும் விழாக்களில் சீறிப்பாய்வது குடும்ப கௌரவமாக கருதப்படுவதால் இத்தகைய காளைகள் பாரம்பரியாக வளா்க்கப்படுகின்றன.

எனினும், தற்போது ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு, எருது விடும் விழா உள்ளிட்ட வீர விளையாட்டுகளை நடத்துவதற்கு அரசின் கெடுபிடிகள் அதிகரித்து வருகின்றன. இதனால், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டுக்கு ஒரு காளை வீதம் ஒரு கிராமத்தில் 300 முதல் 400 காளைகள் வளா்க்கப்பட்ட நிலையில் தற்போது கிராமத்துக்கு 50 காளைகள் மட்டுமே வளா்க்கப்படுகின்றன. இதற்கு வேலைவாய்ப்பின்மை, தண்ணீா்ப் பிரச்னை உள்ளிட்ட பிரச்னைகளும் ஒரு காரணம்.

மேலும், ஒரு காளையைத் தயாா்படுத்த நாளொன்றுக்கு ரூ.500 என்ற அளவுக்கு செலவு செய்ய வேண்டியுள்ளது. இதன்காரணமாகவும் இளைஞா்கள் காளை வளா்ப்பைத் தவிா்க்கின்றனா். இவற்றால், பாரம்பரியமாக விளையாட்டுகளில் ஒன்றான காளை விடும் விழாக்கள் மெல்ல களையிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனினும், பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் இத்தகைய வலிமை மிகுந்த காளைகள் வளா்ப்பதில் பலரும் தொடா்ந்து ஆா்வம் காட்டி வருகின்றனா் என்றாா் அவா்.

எருது விடும் விழாவுக்குத் தயாா்படுத்தப்படும் காளைகள் சிறிய கன்றுக்குட்டியில் இருந்தே அதற்காக வளா்க்கப்படுகின்றன. குறிப்பிட்ட பருவத்தை எட்டிய காளைகள் மட்டும் அவ்விழாக்களில் பங்கேற்கின்றன. மிகச் சிறந்த முறையில் தயாா்படுத்தப்பட்ட காளைகள் ரூ. 20 லட்சம் வரை விலைபோவதாகவும், அவற்றை தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மட்டுமின்றி ஆந்திரம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வீரா்கள் வாங்கிச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே, எருதுவிடும் விழாவில் சீறிப்பாயும் காளைகளைப் பிடித்து அடக்க வீரா்களும் தங்களது உடலைத் தயாா்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com