ஆம்பூரில் உள்ள ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் திங்கள்கிழமை சோதனை நடத்தினர்.
ஆம்பூர் ஓ.வி. ரோடு பகுதியில் ஆங்காங் டெக்ஸ்டைல்ஸ் அண்ட் ரெடிமேட்ஸ் என்ற பிரபல ஜவுளிக்கடை அமைந்துள்ளது. இந்தக் கடைக்கு அருகே அவர்களுக்கு மேலும் இரு ஜவுளிக்கடைகள் உள்ளன. திங்கள்கிழமை காலை சென்னை மற்றும் வேலூரிலிருந்து வருமான வரித்துறை அதிகாரிகள் 15 பேர் 3 கார்களில் ஆம்பூர்
வந்தனர்.
ஆம்பூரில் ஆங்காங் ஜவுளி கடைகளுக்குச் சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் கடைகளின் கதவுகளை மூடிவிட்டனர். அப்போது, உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. அதே போல பணியாளர்கள் சிலரை வெளியில் அனுப்பவில்லை. இரவு வரை வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டனர்.
ஆம்பூர் பகுதியில் தொடர்ந்து பல்வேறு தொழிலதிபர்களின் நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொண்டு வருவது ஆம்பூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்பூர் பகுதியில் வருமான வரி ஏய்ப்பு செய்திருப்பவர்களின் பட்டியலை வருமான வரித் துறையினர் தயாரித்து அவர்களின் கணக்கு நடவடிக்கை மற்றும் பண பரிவர்த்தனைகளை தொடர்ந்து கண்காணித்து அது தொடர்பான ஆவணங்களை சேகரித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.