ஜோலார்பேட்டை அருகே பள்ளி மாணவரைக் கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
திருப்பத்தூரை அடுத்த ஜோலார்பேட்டை அருகேயுள்ள குடியானகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் மகன் சத்தியமூர்த்தி (12). இவர், ஜோலார்பேட்டையில் உள்ள தனியார் மெட்ரிக். பள்ளியில் 7-ஆம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் சத்தியமூர்த்தி தனது தந்தையின் இருசக்கர வானத்தை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார். பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் சத்தியமூர்த்தி அங்குள்ள கிணற்றில் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாகக் கிடந்தார்.
இதுகுறித்து ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதில், குடியானகுப்பம் பகுதியைச் சேர்ந்த முருகன் (34) சத்தியமூர்த்தியைத் தாக்கி கொலை செய்து, சடலத்தை கிணற்றில் வீசி விட்டு, இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் முருகனை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி இந்திராணி குற்றம்சாட்டப்பட்ட முருகனுக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 1,500 அபராதமும் விதித்து செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார். இதையடுத்து முருகன் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.