லாலாப்பேட்டை காஞ்சனகிரி மலையடிவார சதாசிவ ஈஸ்வரர் கோயிலில் மாசி மாத பிரதோஷ சிறப்பு பூஜைகள் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றன. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
ராணிப்பேட்டையை அடுத்த லாலாப்பேட்டைக்கு கிழக்கே காஞ்சனகிரி மலையடிவாரத்தில் கல்புதூர் சாலையில் வல்லாம்பிகை உடனுறை சதாசிவ ஈஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சிவனுக்கு உகந்த நாள்களான பிரதோஷ நாளிலும், மாத பௌர்ணமி மற்றும் சித்திரை பௌர்ணமி நாள்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, மாசி மாத பிரதோஷ நாளான ஞாயிற்றுக்கிழமை மாலை, இக்கோயிலில் சிறப்பு அபிஷேமும், மகா தீபாராதனையும் நடைபெற்றது. பின்னர் அங்கு திரண்டிருந்த பக்தர்களுக்கு விபூதி, குங்குமப் பிரசாதம் வழங்கப்பட்டது. அன்னதானமும் செய்யப்பட்டது.
சிறப்பு வழிபாட்டில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்களும், சதாசிவ ஈஸ்வரர் அறக்கட்டளை நிறுவனர் நேதாஜி கே.நடேசன் உள்ளிட்டோரும் பங்கேற்று வழிபட்டனர்.