டாப்செட்கோ கடனுதவித் திட்டங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு

தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் செயல்படுத்தப்படும் பல்வேறு கடனுதவித் திட்டங்களில் பயன்பெற வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியுடைய பயனாளிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார  மேம்பாட்டுக் கழகம் (டாப்செட்கோ) மூலம் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு கடன் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
அதன்படி, பொதுகாலக் கடன் திட்டம், பெண்களுக்கான புதிய பொற்காலத் திட்டம், மகிளா சம்ரி யோஜனா, சிறுகடன் திட்டம், கறவை மாட்டுக் கடன், வாகனக் கடன் திட்டம்  உள்ளிட்ட பிரிவுகளில் கடன் வழங்கப்படுகிறது. 
இதுதவிர, இளம் தொழிற் பட்டதாரிகள் சுயதொழில்புரிய கடனுதவி, தொழிற்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்விக் கடன் உள்ளிட்டவையும் அளிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் வகுப்பினராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்துக்கு மிகாமலும், 18 வயதுக்கு மேல் 60 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்டும். 
கடனுதவிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தனிநபர் கடன் அதிகபட்சம் ரூ. 10 லட்சம் வரையும், சுய உதவிக் குழுவுக்கு நபர் ஒன்றுக்கு ரூ. 60 ஆயிரம் வீதம் ஒரு குழுவுக்கு ரூ. 10 லட்சம் வரையும் கடனுதவி வழங்கப்படும். தனிநபர் கடனுக்கு ஆண்டுக்கு 6 சதவீதமும், மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ஆண்டுக்கு 4 சதவீதமும், ஆண்கள் சுய உதவிக் குழுவுக்கு ஆண்டுக்கு 5 சதவீதமும் , கறவை மாடுகள் கடனுக்கு ஆண்டுக்கு 6 சதவீதமும் வட்டி பெறப்படும். கல்விக் கடனுக்கு 1.5 சதவீதத்திலிருந்து 1 சதவீதமாக வட்டி குறைப்பு செய்யப்பட்டுள்ளது. 
இந்த கடனுதவிக்கான விண்ணப்பங்கள், விவரங்களை வேலூர் மாவட்டத்திலுள்ள  இணைப் பதிவாளர், கூட்டுறவு சங்கங்கள், நகர கூட்டுறவு வங்கிகள், அதன் கிளைகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம். பெறப்படும் விண்ணப்பங்கள் மீது  தேர்வுக்குழு பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு கடனுதவி வழங்க பரிந்துரைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com