ஜோலார்பேட்டை அருகே சொத்துத் தகராறில் சகோதரரைத் தாக்கி காயப்படுத்திய அண்ணனை போலீஸார் தேடி வருகின்றனர்.
ஜோலார்பேட்டையை அடுத்த மூக்கனூர் பகுதியைச் சேர்ந்தவர் நாகராஜ் (55). கூலித் தொழிலாளி. இந்நிலையில், நாகராஜுக்கும் அவரது அண்ணன் ராஜேந்திரனுக்கும் (62) பூர்வீக சொத்து சம்பந்தமாக கடந்த சில ஆண்டுகளாக முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சொத்து பிரிப்பது சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடந்துள்ளது.
அப்போது, வாக்குவாதம் ஏற்பட்டதில், ஆத்திரமடைந்த ராஜேந்திரன் மரக்கட்டையால் நாகராஜின் தலையில் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில், பலத்த காயமடைந்த நாகராஜை அவரது குடும்பத்தினர் மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நாகராஜ் அளித்த புகாரின்பேரில், ஜோலார்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக உள்ள ராஜேந்திரனை தேடி வருகின்றனர்.