புதுதில்லியில் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களை அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
எல்ஐசி முகவர்களுக்கு கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும். பாலிஸிதாரர்களுக்கு போனஸ் தொகை உயர்த்த வேண்டும். பாலிஸி, பிரீமியம் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்.
முகவர்களுக்கு பணிக்கொடையை உயர்த்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடு முழுவதும் அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், புதுதில்லியில் மக்களவை துணை தலைவர் மு. தம்பிதுரை, முன்னாள் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோணி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர்
டி. ராஜா ஆகியோரை வெள்ளிக்கிழமை சந்தித்து கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அளித்தனர்.
அகில இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழக முகவர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் என். கஜபதிராவ், கூட்டமைப்பின் அகில இந்திய தொடர்புக் குழுத் தலைவர் ஜே.கே.என். பழனி, தென்மண்டலத் தலைவர் பி. வீரணன், கேரள மாநிலச் செயலர் லீலாகிருஷ்ணன், அகில இந்திய துணைத் தலைவர் விகாஸ்பரத்வாஜ் உள்ளிட்டோர் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் வலியுறுத்த கேட்டுக் கொண்டனர்.