அரக்கோணம் அருகே ஒரு வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 3 டன் குட்கா பொருள்களை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
அரக்கோணத்தை அடுத்த கடம்பநல்லூர் ஊராட்சி எல்லையில் ஒரு வீட்டில் இருந்து நள்ளிரவில் சாக்குப் பைகளில் சரக்குகள் காரில் ஏற்றப்படுவதை அவ்வழியே ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தக்கோலம் காவல்நிலைய போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அவர்கள் அங்கு சென்று அவர்களை விசாரிக்கும்போது இருவர் தப்பியோட முயற்சித்தனர். அந்த இருவரையும் விரட்டிப்பிடித்த போலீஸார் அங்கு விசாரணை நடத்தியதில் அங்கிருந்தவை தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் எனத் தெரிய வந்தது.
இதையடுத்து அரக்கோணம் டிஎஸ்பி துரைபாண்டியன் தலைமையிலான போலீஸார் அந்த வீட்டில் 125 பண்டல்கள் மற்றும் 120 பைகளில் இருந்த குட்கா பொருள்களைப் பறிமுதல் செய்தனர். அவை 3 டன் எடை இருந்தன. அந்த வீட்டில் தங்கியிருந்த அரக்கோணத்தைச் சேர்ந்த லட்சுமிகாந்தன்(27), திருத்தணியைச் சேர்ந்த ராமச்சந்திரன்(50) ஆகிய இருவரையும் கைது செய்து, அங்கிருந்த காரைப்
பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் தக்கோலத்தைச் சேர்ந்த காமராஜ்(35) என்பவரை கைது செய்தனர்.