வாலாஜாபேட்டை தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில் 15-ஆம் ஆண்டு சமத்துவப் பொங்கலுடன் சமயநூல்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, காலை கோ பூஜை, கலச பூஜை செய்து சூரிய பகவானை வழிபடும் வகையில் ஆதித்ய ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து தன்வந்திரி பெருமாளுக்கு நிவேதன படையல் வைத்து வழிபாடு நடைபெற்றது. தொடர்ந்து, ஆன்மிகம் வளரவும், நற்சிந்தனைகள் தழைத்தோங்கவும் அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவாரம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள் மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், கண்ணனின் பகவத்கீதை, மகாபாரதம், திருக்குறள், 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம், பல மகான்கள் எழுதிய பல்வேறு சமய நூல்களை முரளீதர சுவாமிகள் வழங்கினார். இதில் பிரான்ஸ், மோரீஷஸ் ஆகிய நாடுகளிலிருந்து அகிலேஷ் குருஜி தலைமையில் 20-க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.