சென்னை அண்ணா பல்கலைக் கழகம் அறிவித்துள்ள புதிய தேர்வு முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து வேலூரில் பொறியியல் கல்லூரி மாணவர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு, தனியார் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்கள் பருவத் தேர்வு (செமஸ்டர்) முறையில் தேர்வு எழுதுகின்றனர்.
கடந்த 2017-ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இந்த பருவத் தேர்வு முறையில் எவ்வித மாற்றமும் செய்யப் படவில்லை. ஆனால், அந்த ஆண்டின் இறுதி முதல் ஒரு தேர்வில் தோல்வியடைந்தால் 3-ஆவது பருவத் தேர்வில் மட்டுமே தேர்வு எழுத முடியும் என பல்கலைக் கழகம் புதிய விதிமுறையை வகுத்துள்ளது. இந்த விதிமுறையை மாற்றி மீண்டும் பழைய முறையில் பருவத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே பொறியியல் கல்லூரி மாணவர்கள் திரளானோர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில், மாவட்டத்திலுள்ள 8 பொறியியல் கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தை அடுத்து கோரிக்கை மனுவை மாணவ, மாணவியர் ஆட்சியரிடம் அளித்தனர்.