வேலூரில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கிய அரசுப் பொருட்காட்சி மூலம் இதுவரை அரசுக்கு ரூ. 5 லட்சத்து 33 ஆயிரத்து 170 வருமானம் கிடைத்திருப்பதாகவும், 38,517 பேர் பொருட்காட்சியைப் பார்வையிட்டிருப்பதாகவும் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு சார்பில் அரசுப் பொருட்காட்சி வேலூர் கிருபா வர்த்தக மைதானத்தில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில், 27 அரசுத் துறைகளின் திட்டங்கள் குறித்தும், அரசின் சாதனைகள் குறித்தும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், அரசு சாரா 10 நிறுவனங்களின் கண்காட்சி அரங்குகளும், சிறுவர், பெரியவர்களுக்கான சிறப்பு பொழுதுபோக்கு அம்சங்களும், விதவிதமான சிறு உணவு வகைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்தப் பொருட்காட்சியில் மற்ற தனியார் பொருட்காட்சிகளைப் போல அல்லாமல் ஒவ்வொரு அரசுத் துறைகளின் சார்பில் வழங்கப்படும் நலத் திட்டங்கள், அவற்றை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்வது குறித்தும் தெளிவாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
வியாழக்கிழமை (ஜன.17) வரை இந்தப் பொருட்காட்சிக்கு 38,517 பேர் வருகை வந்ததாகவும், பொருட்காட்சி நுழைவுக் கட்டணம் மூலம் அரசுக்கு இதுவரை ரூ. 5 லட்சத்து 33 ஆயிரத்து 170 வருவாய் கிடைத்திருப்பதாகவும் ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, இந்தப் பொருட்காட்சி பிப். 7-ஆம் தேதி வரை நடைபெற உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.