செம்மரம் வெட்டிக் கடத்த முயன்றவர்கள் தப்பியோட்டம்: அரை டன் செம்மரக் கட்டைகள் மீட்பு
வாலாஜாபேட்டை அருகே செம்மரம் வெட்டிக் கடத்த முயன்ற மர்ம நபர்கள் வனத்துறையினர் கண்டதும் தப்பியோடினர். இதையடுத்து, அங்கிருந்த சுமார் அரை டன் செம்மரக்கட்டைகளை வனத்துறையினர் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜாபேட்டையை அடுத்த ஜி.சி.குப்பம் அருகே சமூகக்காடு பகுதியில் வனத் துறையினர் கட்டுப்பாட்டின் கீழ், செம்மரங்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இந்த செம்மரங்களை மர்ம நபர்கள் சிலர் வெட்டிக்கடத்த முயற்சிப்பதாக வனத் துறையினருக்கு தகவல் வந்தது. அதன்பேரில், ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த ஆற்காடு வனச்சரக அலுவலர் கந்தசாமி, சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தபோது, மர்ம நபர்கள் செம்மரங்களை வெட்டிக் கொண்டிருப்பது தெரியவந்தது. அப்போது, வனச் சரகரைக் கண்டதும் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். இதையடுத்து, அவர்கள் வெட்டிய சுமார் அரை டன் மதிப்பிலான செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த வனத் துறையினர், தப்பியோடியவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.