ஆம்பூர் பாலாறு கரையோரம் தனியார் நிலத்தில் முறைகேடாக மணல் அள்ளியதாக 4 டிப்பர் லாரிகள் மற்றும் 2 பொக்லைன் இயந்திரங்களை கிராம மக்கள் சிறைபிடித்து போலீஸாரிடம் புதன்கிழமை ஒப்படைத்தனர்.
ஆம்பூர் மேல்கிருஷ்ணாபுரத்தில் உள்ள பாலாற்றங்கரையோம் தனி நபருக்குச் சொந்தமான நிலத்தில் புதன்கிழமை இரண்டு பொக்லைன் இயந்திரங்கள் மூலம் மணல் அள்ளப்பட்டது.
அள்ளப்பட்ட மணல் ஆம்பூரை அடுத்த சோலூரில் உள்ள பாலாற்றின் வழியாக எடுத்துச் செல்வதை அப்பகுதி மக்கள் பார்த்தனர். அதைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு, மணல் அள்ளும் இடத்துக்குச் சென்றனர்.
மேலும் இதுகுறித்து வருவாய்த் துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர். தனி நபருக்குச் சொந்தமான அந்த நிலத்தில் இரு வார காலத்துக்கு கழிவு மண் அகற்ற மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்த அனுமதியை வைத்துக் கொண்டு, முறைகேடாக மணல் அள்ளி கடத்தியது தெரியவந்தது.
அப்பகுதி பொதுமக்கள் மணல் அள்ளிய பொக்லைன் இயந்திரங்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை சிறைபிடித்தனர்.
தகவல் அறிந்த ஆம்பூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் சம்பவ இடத்துக்குச் சென்று, மணல் அள்ளிய பொக்லைன்கள் மற்றும் 4 டிப்பர் லாரிகளை பறிமுதல் செய்தார்.
மேலும், பொக்லைன் இயந்திரங்களை இயக்கிய இரு ஓட்டுநர்களையும் விசாரணைக்காக போலீஸார் அழைத்துச் சென்றனர்.
இதுகுறித்து, வேலூர் கனிமவளத் துறை உதவி இயக்குநர் ரமேஷ்குமாரிடம் கேட்டபோது, தனி நபருக்குச் சொந்தமான நிலத்தில் கழிவு மண் அகற்றுவதற்காக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மணல் அள்ளுவதற்கு அனுமதி அளிக்கப்படவில்லையென அவர் தெரிவித்தார்.