வாலாஜாபேட்டை மங்களாம்பாள் நிதிஉதவி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிக்கு "கற்பித்தலில் புதுமை ஆசிரியர்' (innovative teacher award) என்ற விருதை சென்னையில் புதன்கிழமை நடந்த விழாவில் மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வழங்கி கௌரவித்தார்.
இது குறித்து அப்பள்ளி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
சமுதாயத்தில் மாணவர்களின் சுய ஒழுக்கம் மற்றும் கல்வி முன்னேற்றத்துக்காக கற்பித்தலில் முதலீடு இல்லா புதுமையான முயற்சிகளை (ZERO-INVESTMENT INNOVATIONS FOR EDUCATION INITIATIVES) ஆசிரியர்களிடம் ஊக்குவிக்க மாநிலம் முழுவதும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கற்பித்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களை மையமாக வைத்து சமகார சிக்ஷா அபியான் மற்றும் ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி ஆகியவை இணைந்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்தப் பயிற்சியில் பங்கு பெற்று சிறந்த முயற்சிகளை மேற்கொண்டு புத்தகங்களை சமர்ப்பித்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆசிரியர்களில் வாலாஜாபேட்டை மங்களாம்பாள் அரசு நிதியுதவி பெறும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ராஜேஸ்வரியும் ஒருவர் ஆவார். அவருக்கு சென்னை சேத்துப்பட்டு எம்.சி.சி.பள்ளியில் புதன்கிழமை நடந்த விழாவில் "கற்பித்தலில் புதுமை ஆசிரியர் விருதை மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கி கௌரவித்தார்.
இவ்விருதைப் பெற்ற தலைமை ஆசிரியை ராஜேஸ்வரிக்கு வட்டாரக் கல்வி அலுவலர் இ.சந்திரா, பள்ளிக் கல்விக் குழு தலைவர் டி.எம்.வெங்கட்ராமன், செயலாளர் வி.சிவகாமசுந்தரி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் எஸ்.சிவபாலகிருஷ்ணன் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.