திருப்பத்தூர் அருகே அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஓரிகாமி எனப்படும் காகித மடிப்புக் கலை பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த ஒன்றியத்திற்கு உள்பட்ட திருப்பத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பேராம்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னசமுத்திரம் தொடக்கப் பள்ளி, ஜொள்ளக்கவுண்டனுர் அரசு நடுநிலைப் பள்ளி, பொம்மிக்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளி, புதுப்பூங்குளம் அரசு நடுநிலைப் பள்ளிகளில் கடந்த திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாள்களுக்கு ஓரிகாமி பயிற்சி நடைபெற்றது.
ஓரிகாமி கலைஞர் தஞ்சை தியாகசேகர் பங்கேற்று மாணவர்களுக்கு பயிற்சியளித்தார். மாணவர்களின் கற்பனைத் திறன், மாணவர்களை ஒருமுகப்படுத்துதல், ஓரிகாமியின் அறிவியல் பயன்பாடு பற்றிய பல்வேறு தகவல்கள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டது. அதன் பின், மாணவர்கள் காகிதத்தைப் பயன்படுத்தி பல்வேறு உருவங்களைச் செய்தனர்.
இதற்கான ஏற்பாட்டை வேலூர் மாவட்ட மக்கள் பாதை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சண்முகம், வெங்கடேசன்,திருமால், கோவேந்தன் செய்திருந்தனர். புதுபூங்குளம் சமூக ஆர்வலர் வேலு, பயிற்சியாளருக்கு நினைவுப் பரிசு வழங்கினார். வேலூர் மாவட்ட மக்கள் பாதை திட்டப் பொறுப்பாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார்.