ஆவணங்களின்றி கொண்டு சென்ற ரூ. 4 லட்சம் பறிமுதல்

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வரும்

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டம் முழுவதும் வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இதுவரை ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக ரூ. 4 லட்சத்து 2 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் அதிகாரியும், ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
வேலூர் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து 18 பறக்கும் படை, 18 நிலை கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு வாகன சோதனை உள்பட கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
அதன்படி, குடியாத்தம் பத்தரப்பல்லி சோதனைச்சாவடியில் நடத்தப்பட்ட வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்ட ரூ. 1,67,900, வேலூர் கொணவட்டம் பகுதியில் ரூ. 2,34,150 என இதுவரை ரூ. 4 லட்சத்து 2 ஆயிரத்து 50 கைப்பற்றப்பட்டு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி பொதுமக்கள், வணிகர்கள், வியாபாரிகள் ரூ. 50 ஆயிரத்துக்கு அதிகமான தொகையை உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்ல வேண்டாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பேர்ணாம்பட்டில்...
பேர்ணாம்பட்டு அருகே உரிய ஆவணங்கள் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ. 2.98 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
குடியாத்தம் தொகுதி தேர்தல் பறக்கும் படை அலுவலர் உமாசங்கர் தலைமையில் அலுவலர்கள் பேர்ணாம்பட்டையை அடுத்த சிந்தகணவாய் அருகே வியாழக்கிழமை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது குடியாத்தத்தில் இருந்து பேர்ணாம்பட்டு நோக்கிச் சென்ற காரை நிறுத்தி சோதனையிட்டனர். 
காரில் இருந்த திருப்பத்தூரைச் சேர்ந்த மாங்காய் வியாபாரி நூர்பாஷாவிடம் (40) ரூ. 2.98 லட்சம் இருப்பது தெரியவந்தது. பணத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லாததால் பறக்கும் படையினர் அதைப் பறிமுதல் செய்து பேர்ணாம்பட்டு வட்டாட்சியரும், உதவித் தேர்தல் அலுவலருமான செண்பகவள்ளியிடம் ஒப்படைத்தனர்.
2.9 கிலோ தங்க நகைகள் பறிமுதல்...
வாணியம்பாடி காதர்பேட்டை அருகே தேர்தல் பறக்கும் படை அலுவலர் முருகதாஸ் தலைமையில் உதவிக் காவல் ஆய்வாளர் கோதண்டன் மற்றும் போலீஸார் வியாழக்கிழமை இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், காருக்குள் ஒரு பையில் தங்க நகைகள் இருப்பதைக் கண்டறிந்தனர்.
இதுபற்றி விசாரித்த போது வாணியம்பாடி பூக்கடை பஜாரில் உள்ள தனியார் தங்கப் பட்டறையிலிருந்து தங்க  நகைகளை உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாமல் ஆம்பூரைச் சேர்ந்த ரமேஷ்(45) என்பவர் எடுத்து வந்தது தெரிய வந்தது. அவரிடமிருந்த 2 கிலோ 980 கிராம் தங்க நகைகளைக் கைப்பற்றிய அதிகாரிகள் அதை வாணியம்பாடி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். இதுதொடர்பாக வட்டாட்சியர் முருகன் விசாரணை நடத்தி வருகிறார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com