திருப்பத்தூர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரவு நேரத்தில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குப்பைகளைத் தரம் பிரித்து மக்கும் குப்பை , மக்கா குப்பைகளாக மாற்றுவது, நுண் உரக் கிடங்குகள் அமைப்பது போன்ற பணிகள் நடைபெறுகின்றன. இதையொட்டி, நகரில் குப்பைகளை சேகரிக்க பேட்டரி வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலம் நகராட்சி ஊழியர்கள் வீடு, வீடாகச் சென்று குப்பைகளை சேகரித்து வருகின்றனர். குறிப்பாக புதன்கிழமைகளில் பிளாஸ்டிக் பொருள்கள் மட்டும் பெறப்படுகின்றன.
இந்நிலையில், உணவகங்கள் மற்றும் வணிக வளாகங்களிலிருந்து இரவு நேரங்களில் தெருவோரங்களிலும், கால்வாய்களிலும் குப்பைகள் கொட்டப்படுவதாக சமூக ஆர்வலர்கள் நகராட்சியில் புகார் அளித்தனர்.
இதுகுறித்து சுகாதார அலுவலர் ராஜரத்தினத்திடம் கேட்டதற்கு, "இதுபோன்ற செயல்களைக் கண்காணிக்க 8 பேர் கொண்ட இரவு ரோந்துக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் இரவில் ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மீறி குப்பைகளை தெருவில் கொட்டுவோருக்கு அபராதம் விதிக்கப்படும்' என்றார்.
கடந்த இரு நாள்களில் தெருவில் குப்பை கொட்டியதற்காக 2 திருமண மண்டபங்களுக்கும், உணவகம் ஒன்றுக்கும் அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.