திருப்பத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த இளைஞரை தீயணைப்புத் துறையினர் மீட்டனர்.
மாடப்பள்ளி கிராமத்தில் இளைஞர் ஒருவர் வெள்ளிக்கிழமை அங்குள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதைக் கண்ட அப்பகுதியினர் திருப்பத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் அரை மணிநேரம் போராடி, 50 அடி ஆழம் கொண்ட கிணற்றில் இருந்து இளைஞரை பலத்த காயங்களுடன் மீட்டனர்.
பின்னர், அவரிடம் விசாரித்ததில் அந்த இளைஞர் அகரம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி குமரேசன் (35) என்பதும், வெள்ளிக்கிழமை காலை மது அருந்திய நிலையில் இருந்த அவர் மயக்கத்தில் கிணற்றில் தவறி விழுந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து, குமரேசனை அவர்கள் சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.