குடிநீர் கேட்டு சாலை மறியல்

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.

நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல் செய்தனர்.
பச்சூர் பகுதியில் கடந்த சில மாதங்களாக ஒரு சிலர் அனுமதி இல்லாமல் மின் மோட்டார் பொருத்தி தங்களது வீடுகளுக்கு குடிநீர் உறிஞ்சுவதால் மற்ற பகுதிக்கு சீரான குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த சில நாள்களாக அப்பகுதியில் குடிநீர் விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டது. 
இதனால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை காலை 8 மணியளவில் 30-க்கும் அதிகமானோர் காலிக் குடங்களுடன் திருப்பத்தூர் - குப்பம் சாலையில் பச்சூர் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த கல்லூரி வாகனங்களையும் சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
தகவலறிந்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளர் சாந்தலிங்கம் மற்றும் போலீஸார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்டோரிடம் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எடுத்துக் கூறி சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக  உறுதி கூறியதையடுத்து  மறியலை கைவிட்டு மக்கள் கலைந்து சென்றனர். மறியல் காரணமாக அப்பகுதியில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து, வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ் பச்சூர் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அனுமதி இல்லாமல் மின் மோட்டார் மூலம் குடிநீர் உறிஞ்சிய 7 வீடுகளின் குடிநீர் இணைப்பைத் துண்டித்து அவர் நடவடிக்கை எடுத்தார். மேலும் அங்குள்ள தெருவில் ஒரு இடத்தில் தலா 5 குழாய்கள் வீதம் 3 இடங்களில் பொதுக் குழாய் அமைத்து சீரான குடிநீர் கிடைக்க  ஊராட்சி செயலாளருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து தெருவில் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com