வேலூர் மக்களவைத் தேர்தலில் போட்டியிட சுயேச்சை வேட்பாளர் குதிரையில் வந்து வேட்புமனு தாக்கல் செய்தார்.
வேலூர் மக்களவைத் தொகுதி தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் உள்பட 7 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். இரண்டாவது நாளான வெள்ளிக்கிழமை கோவையைச் சேர்ந்த நூர்முகமது (60) காலை 11.50 மணியளவில் சுயேச்சையாக மனு தாக்கல் செய்தார். இதற்காக அவர் வேட்புமனுவுடன் குதிரையில் வந்தார். இதைப்பார்த்த போலீஸார் குதிரையை ஆட்சியர் அலுவலகத்துக்கு வெளியிலேயே நிறுத்தம்படி கூறினர். அதன்படி, நூர்முகமது குதிரையை வெளியே நிறுத்திவிட்டு ஆட்சியர் அலுவலகத்துக்குள் சென்று வேட்பு மனு தாக்கல் செய்தார்.
அவரைத் தொடர்ந்து, தொரப்பாடியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் சுப்பிரமணியன் (75), பேர்ணாம்பட்டு நகரைச் சேர்ந்த ரஷீத் அகமது (34) ஆகிய 3 பேர் மனு தாக்கல் செய்தனர். கடந்த இரு நாள்களில் மொத்தம் 10 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
திமுக சார்பில் போட்டியிடும் டி.எம்.கதிர்ஆனந்த் வரும் 17-ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.