இயற்கை வளங்களைப் பாதுகாக்க அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்று விஐடி துணைத் தலைவர் ஜி.வி. செல்வம் கூறினார் .
சுவாமி விவேகானந்தர் பேரவை சார்பில் ஆற்காடு, திமிரி, வாலாஜாப்பேட்டை ஒன்றியங்களில் உள்ள 42 அரசுப் பள்ளிகளில் 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் பள்ளி அளவில் முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி, பரிசு வழங்கும் விழா ஆற்காட்டில் சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் ஜி.வி. செல்வம் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசு வழங்கிப் பேசியது:
நீட் தேர்வைக் கண்டு மாணவர்கள் பயப்படக் கூடாது. நீட் தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தன்னம்பிக்கையோடு படித்தால் அனைவரும் வெற்றி பெறலாம்.
மக்களாகிய நாம் தண்ணீரை சேமிக்க வேண்டும். இயற்கை வளங்களைப் பாதுகாக்க வேண்டும். தண்ணீர் தேவைக்கும் நாம் சுவாசிக்கும் பிராண வாயுவுக்கும் அதிக அளவில் மரக்கன்றுகளை நட வேண்டும் என்றார்.
ஆற்காடு மகாத்மா காந்தி முதியோர் இல்லத் தலைவர் ஜெ.லட்சுமணன் தலைமை வகித்தார். அண்ணாமலையார் அறக்கட்டளைத் தலைவர் கு.சரவணன், மகாத்மா காந்தி அறக்கட்டளைத் துணைத் தலைவர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சரஸ்வதி வித்யாலயா பள்ளித் தலைமையாசிரியர் நகராஜன் வரவேற்றார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் நிர்வாகி ஆர்.சீனிவாசன், வணிகர் சங்கத் தலைவர்கள் வி.மணி (ராணிப்பேட்டை), வி.டி.செல்வராஜ் (திமிரி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.